.

Our Vision
அன்பு, கருணை என்பவற்றுடன் கூடிய உன்னத சேவையை மக்களுக்கு வழங்கி சிறந்த ஆரோக்கியமும் சுகாதார மேம்பாடும் பெற்ற சமுதாயம்

Our Mission
அா்ப்பணிப்புடனான சேவை, மனித நேயமுடனான பராமரிப்பு, திருப்திகரமான செயற்பாடுகள், பயன்தகு சுகாதார கொள்கைகளை நடைமுறைப்படுத்தல், பாதுகாப்பான காப்புறுதி.

Our Motto
Primaordial Prevention Protected Generation

Friday, September 24, 2010

பாதுகாப்பானது, சிக்கனமானது கொசுவலை மட்டுமே




கொசு விரட்டிகளால் கெடுதலா?

கொசுத்தொல்லையிலிருந்து தப்பிக்கவும் இரவு நன்கு தூங்கவும் கொசுவர்த்தி சுருள், மேட், கிரீம் முதலியவற்றை உபயோகப் படுத்துகிறோம் அல்லவா? இவற்றால் நம் ஆரோக்கியத்திற்கும், பணத்திற்கும் கேடு என்கின்றனர் விஞ்ஞானிகள்.

கொசுவர்த்திச் சுருள்களிலும் மேட்களிலும் செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட அலெத்ரின், டாலத்ரின் டி டிரான்ஸாலத்ரின் போன்ற இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த இரசாயனங்களின் அடர்த்தி, நாம் இக்காற்றை சுவாசிக்கும் காலம், அறையினுள் வரும் புதிய காற்றின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து நமக்கு விளைவிக்கப்படும் தீங்குகள் அளவு நிர்ணயிக்கப்படுகிறது.

மக்கள் கொசுக்களுக்குப் பயந்து மாலை ஆறு மணிக்கே ஜன்னல் கதவுகளை எல்லாம் அடைத்துவிட்டு புதிய காற்று வீட்டுக்குள் வருவதை தடை செய்து விடுகின்றனர். இவ்வாறு அடைபட்டக் காற்றுக்குள்ளேயே விளக்கு எரிப்பது, சமைப்பது, குடும்பத்தார் அனைவரும் சுவாசிப்பது போன்ற செயல்களாலேயே பிராண வாயு மிகவும் குறைந்துவிடுகிறது. இதோடு புகையும், கேடு விளைவிக்கும் வாயுக்களும் வீட்டினுள் நிறைந்து விடுகின்றன. போதாக்குறைக்கு இருட்டியதுமே கொசு விரட்டிகளையும் பயன்படுத்த ஆரம்பித்து விடுகிறார்கள்.

இதனால் வீட்டில் இருந்த சிறிதான பிராணவாயுவும் கெட்டு விடுகிறது. ஆக, இரவு முழுவதையும் மாசுக்காற்று உள்ள சூழ்நிலையிலேயே கழிக்கிறார்கள். கொசு விரட்டிகளில் உடலில் சேர்ந்த விஷத்தை வெளியேற்ற சளிபிடித்தல், காய்ச்சல் ஆகியவை ஏற்படுகின்றன. சுத்திகரிப்பு நடக்காததால் மருந்து சாப்பிட்டும் குணம் பெற முடிவதில்லை.

மூன்று நாட்களில் இவை குறையாததால் அலர்ஜி என்று பெயர் சூட்டி, அந்தச் செயலை முடக்க ஒவ்வாமையைக் குணப்படுத்தும் மருந்துகளையும் ஆரோக்கியமாக உடல் தாக்குப் பிடிக்காமல் திணறுகிறது. அதே நேரத்தில் உடலுக்கு ஒவ்வாத பொருட்களை வெளியேற்றும் செயல்முறை படிப்படியாக இழந்து விடுகிறது. இதன் மூலம் படை வீரர்களை இழந்த கோட்டையைப் போல நோய், எதிர்ப்பு சக்தியை இழந்த உடலைப் பெற்று விடுகிறது. பிறகு நோய்களின் வருகைக்குக் கேட்க வேண்டுமா?

தொடர்ந்து கொசு விரட்டி உபயோகித்து வருகிறவர்களுக்கு நுரையீரல் ஒருவித ஒவ்வாமை ஏற்பட்டு முழுமையாக விரிவடையாமலும் அதன் கொள்ளளவுக்குண்டான காற்றை செயல்பாட்டிற்கு எடுத்துக்கொள்ள இயலாமலும் போய் விடுவதாக பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன. மும்பையின் நுகர்வோர் வழிகாட்டும் கழகத்தின் முடிவுப்படி கொசு விரட்டிகளில் பயன்படுத்தப்படும் இரசாயனம் சிலருக்கு மலட்டுத் தன்மையை ஏற்படுத்த வல்லது என்கிறார்கள்.

கொசு விரட்டியில் உள்ள டயோக்சின் புற்றுநோயை உருவாக்க வல்லது. ‘அலெத்ரின் மனிதர்களின் உடல் எடையை மெல்ல இழக்கச் செய்யவல்லது’.

‘மேட்’ புகையை பிஞ்சுக்குழந்தைகள் இரவு முழுவதும் சுவாசித்தால் வலிப்பு நோய் ஏற்படலாம் என்கிறது லக்னோ கிஸ் ஜோர்ஜின் மருத்துவப் பல்கலைக்கழகம். இங்கே உள்ள டாக்டர் தேவிகாநாக் என்பவரின் கண்டுபிடிப்பு இது.

கொசுக்களைத் தடுக்க ஒரே எளிய வழி, பாதுகாப்பானது, சிக்கனமானது கொசுவலை மட்டுமே!



Tuesday, September 21, 2010

டெங்கு காய்ச்சலா? அறிவது எப்படி?

அன்றுதான் ஆரம்பித்த காய்ச்சல் 103- 104 எனக் கடுமையாக அடித்துக் கொண்டிருந்தது. பத்து வயது மதிக்கத்தக்க அந்தப் பையனின் கண்கள் சற்று சிவந்திருந்தன. கடுமையான உடல் உழைவினால் அமைதியாக இருக்க முடியாது அந்தரப்பட்டுக் கொண்டிருந்தான். சற்றுத் தொண்டை நோவும் இருந்தது. ஆயினும் தடிமன், மூக்கடைப்பு இருமல் போன்ற அறிகுறிகள் எதுவுமே இல்லை. இத்தகைய காய்ச்சல் இப்பொழுது பரவலாகக் காணப்படுகிறது.


'இது டெங்கு காய்ச்சலாக இருக்குமோ' என கூட்டி வந்த தாய் கேட்டாள். எந்த வைத்தியனாலும் நூறு சதவிகிதம் நிச்சமாகச் சொல்ல முடியாது. காரணம் ஏனைய வைரஸ் காய்ச்சல்கள் போலவே இதுவும் ஆரம்பத்தில் இருக்கும். இது டெங்குதான் என உறுதியாகச் சொல்லக் கூடிய அறிகுறிகள் ஏதும் முதல் மூன்று நாட்களிலும் இருக்காது.

'இரத்தம் சோதித்துப் பார்ப்பமோ' என்று தாய் கேட்டாள். முதல் நாளிலிலேயே இரத்தம் சோதித்துப் பார்ப்பதிலும் எந்தவித பலனும் இருக்கப் போவதில்லை.

டெங்கு என்பதை நிச்சயமாகக் காட்டும்
Dengue antibody டெஸ்ட் செய்வதற்கு காய்ச்சல் தொடங்கி ஒரு வாரம் வரை செல்ல வேண்டும். பெரும்பாலும் அதற்கிடையில் காய்ச்சல் குணமாகிவிடும்.

டெங்குவாக இருக்குமோ என ஐமிச்சம் என்றால், காய்ச்சல் தொடங்கி மூன்று நாட்களுக்குப் பின்னர் FBC என்று சொல்லப்படும்
Full blood Count செய்து பார்க்கலாம். அதில் முக்கியமாக Platelet count மற்றும் PCV ஆகியவற்றையே மருத்துவர்கள் கவனத்தில் எடுத்துப் பார்ப்பார்கள். இந்தப் பரிசோதனைகளில் மாற்றம் இருந்தால் அடுத்து வரும் ஒரு சில நாட்களுக்கு இப்பரிசோதனையை மீண்டும் மீண்டும் செய்து நோயின் நிலையைத் தொடர்ந்து கணிக்க நேரிடும்.

ஆனால் அதுவரை ஏனைய கடும் காய்ச்சல்காரர்களைப் பராமரிப்பது போல பாராமரித்தால் போதுமானது. காய்ச்சலுக்கு பரசிற்றமோல் கொடுக்க வேண்டும். ஆறு மணிநேரத்திற்கு ஒரு தடவை கொடுக்க வேண்டும். வளர்ந்தவர்களுக்கு ஒவ்வொரு தடவையும் இரண்டு மாத்திரைகள் கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கும், இளவயதினருக்கும் அவர்களது எடைக்கு ஏற்ப அல்லது வயதிற்கு ஏற்ப மாத்திரையின் அளவு மாறுபடும்.

புரூபன், பொன்ஸ்டன், டைகுளோபெனிக் போன்ற வலிநிவாரணி மருந்துகளை டெங்கு என்ற சந்தேகம் இருந்தால் காய்சலுக்கோ உடல்வலிக்கோ கொடுக்கக் கூடாது. போதிய நீராகாரம் கொடுக்க வேண்டும். உண்ண முடிந்தால் வழமைபோலச் சாப்பிடலாம். ஆயினும் கோக், நெக்ரோ போன்ற செந்நிறப் பானங்களைத் தவிர்க்க வேண்டும்.

அதேபோல சிவப்பு நிறமுடைய ஏனைய உணவுகளையும், பீற்ரூட் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.

சாதாரண டெங்கு காய்ச்சல் ஆபத்தானது அல்ல. சிலநாட்களில் எந்தவித பின்வளைவுகளும் இன்றி தானாகவே குணமாகிவிடும்.
ஆயினும் டெங்கு குருதிப் பெருக்குக் காய்ச்சல்
(Dengue Haemorrhagic Fever- DHF) மிகவும் ஆபத்தானது. இதன்போதும் கடுமையான காய்ச்சல் இருக்கும். முகம் சிவத்தல், கடுமையான தலையிடி, கண்வலி, தசைவலி, மூட்டுவலி ஆகியன சேர்ந்திருக்கும். இவை 2 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கலாம்.

அத்துடன் இரத்தம் கசிவதற்கான அறிகுறிகள் ஏதும் தோன்றலாம். உதாரணமாக மூக்கால் இரத்தம் வடிதல், முரசிலிருந்து இரத்தம் கசிதல், தோலில் ஆங்காங்கே சிவப்பான புள்ளிகள் தோன்றல், ஊசி ஏற்றிய இடத்தில் அல்லது குளுக்கோஸ் ஏற்றிய இடத்தில் இரத்தம் கசிந்து கண்டல் போலத் தோன்றுதல், வாந்தியோடு இரத்தம் வருதல், மலம் கருமையாக வெளியேறல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அலட்சியப்படுத்த வேண்டாம்.

அத்துடன் இந்நோயின் போது ஈரல் வீக்கமடைவதால் பசியின்மை, வயிற்றுநோ, வாந்தி, போன்றவை தோன்றும். சிலருக்கு வயிற்றோட்டமும் ஏற்படுவதுண்டு. அத்தகைய அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.

டெங்கு குருதிப் பெருக்குக் காய்ச்சல் எந்த வயதினரையும் பாதிக்கலாம் ஆயினும் குழந்தைகளைப் பாதிப்பது அதிகமாகும். அதிலும் ஒரு வயதிற்கு உட்பட்ட பிள்ளைகளைத் தாக்கும் போது ஆபத்து அதிகமாகும். நோஞ்சான் பிள்ளைகளைவிட ஆரோக்கியமான பிள்ளைகளையே அதிகம் பாதிப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இதற்கான காரணம் தெளிவாகவில்லை.

டெங்கு கிருமியில் பல உபபிரிவுகள் இருப்பதால் ஒரு முறை டெங்கு வந்தால் மீண்டும் வராது என்று சொல்ல முடியாது. திரும்ப வரக் கூடிய சாத்தியம் உண்டு. உண்மையில் முதல் தடவை வரும்போது பெரிய பாதிப்புகள் இருப்பதில்லை. சாதாரண காய்ச்சல் போல குணமாகிவிடும். ஆயினும் அடுத்த முறை வரும்போதே கடுமையாக இருக்கும். டெங்கு குருதிப் பெருக்குக் காய்ச்சல் போன்றவை அப்பொழுதே வருகின்றன.

பலருக்கு காய்ச்சல் விட்ட பின்னரும் கடுமையான களைப்பு, தலைச்சுற்று, கிறுதி போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். இவை உடலின் உள்ளே குருதிக் கசிவு ஏற்பட்டதால் அல்லது நீர்இழப்பு ஏற்பட்டதால் தோன்றியிருக்கலாம். எனவே அலட்சியப்படுத்தக் கூடாததாகும்.

டெங்கு காய்ச்சல் உலகளாவிய ரீதியில் பரவியுள்ளது. சிகப்பாக காட்டிய பகுதியில் கடுமையான பரிப்புகளை ஏற்படுத்துகிறது.

இது எயிடிஸ் எஜிப்பாய் (Aedes aegypti) என்ற வகை நுளம்பினால் பரவுகிறது. நோயாளியின் இரத்தம் குடித்து வயிறு பருத்திருக்கும் நுளம்பனைப் படத்தில் காணுங்கள்.